பீகார் மாநிலம் கோபால் போரே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பங்கடா ஜகிர்தாரி கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை  சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவிலான ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியது.

20 வயதான அர்பிதா குமாரி என்ற இளம்பெண், வியாழக்கிழமை இரவு திடீரென காணாமல் போனார். இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரில், அர்பிதாவின் காதலன் பவன் சவுகான் என்பவரே அவரைக் கடத்திச் சென்றதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் பவனை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மறுநாள் காலை யாருமே எதிர்பார்க்காத வகையில், அர்பிதா அங்கிருந்த ஒரு உயரமான செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தனது காதலனை காவல்துறையினர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி அவர் கோபுரத்தின் உச்சியில் இருந்து பிடிவாதம் பிடித்தார். பல மணிநேரம் நீடித்த இந்தப் போராட்டத்தால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

“>

 

இறுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்த, காவல்துறையினர் காதலன் பவனை கைவிலங்குடன் அந்த இடத்திற்கு அழைத்து வந்தனர். பவனை நேரில் பார்த்த பிறகே அர்பிதா கீழே இறங்கி வந்தார். இருப்பினும், அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்குச் செல்ல மறுத்துவிட்டார்.

குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது இருவருக்கும் காவல்துறையினர் உரிய ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.