
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கஞ்சிராஜபுரத்தில் சர்வேஷ்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவருக்கு பிரியதர்ஷினி(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பிரியதர்ஷினிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரியதர்ஷினி அந்த பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் பிரின்ஸ் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார்.
அவருக்கு பிரின்ஸ் மருந்து மாத்திரைகளை வழங்கியுள்ளார். அவர் முறையாக மருத்துவ படிக்காமல் வீட்டிலேயே கிளினிக் போல நடத்தி அந்த பகுதி மக்களுக்கு மருந்து மாத்திரைகளை கொடுத்து வந்துள்ளார். நேற்று கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரியதர்ஷினிக்கு வீரியம் கொண்ட ஊசியை பிரின்ஸ் செலுத்தியுள்ளார். இதனால் பிரியதர்ஷினிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
அவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரியதர்ஷினி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரின்சை பிடித்து விசாரித்த போது அவர் மருத்துவ படிக்காமல் பல வருடங்களாக கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.