ஐபிஎல் இறுதி போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோத இருக்கிறது. இதுவரை இரண்டு அணிகளுமே ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத நிலையில் 18 வருட ஐபிஎல் வரலாற்றில் எந்த அணி கோப்பையை வென்றாலும் அது வரலாறாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில் தற்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் டெல்லி, கொல்கத்தா மற்றும் தற்போது பஞ்சாப் ஆகிய அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ள நிலையில் கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்காக கோப்பையையும் வென்று கொடுத்தார்.

இந்நிலையில் 11 வருடங்களுக்குப் பிறகு தற்போது பஞ்சாப் அணியை அவர் இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றுள்ள நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் கோப்பையை வெல்ல வேண்டுமென ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த முறை நடிகர் ஷாருக்கானுக்காக அதாவது கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்காக கோப்பையை வென்று கொடுத்த நிலையில் இந்த முறை நடிகைக்காக அதாவது பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராக இருக்கும் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்காக அவர் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் விராட் கோலி ரசிகர்கள் ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்பும் நிலையில் மற்றொருபுறம் ஸ்ரேயஸ் ஐயருக்காக பஞ்சாப் கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புவதால் இன்று நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் ஐயமில்லை.