
கரூர் மாவட்டத்தில் உள்ள சனப்பிரட்டியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று நந்தினி தனது இரண்டு வயது கை குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து திடீரென தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.
அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது நந்தினி கூறியதாவது, எனது பெரியப்பா மகன் பிரபாகரனிடம் இரண்டு லட்ச ரூபாய் கடன் கொடுத்தேன். அதனை கடந்த வாரம் கேட்டபோது பணம் தர முடியாது என கூறுகின்றனர். மேலும் எனது தந்தை, பெரியப்பா, பிரபாகரன் ஆகியோர் கடுமையாக தாக்கினர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீப்பிடிக்க முயன்றதாக அவர் கூறினார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.