ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் கொடூர சம்பவத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆர்த்தி ஆர்.மேனன் என்பவர் தந்தையை இழந்து விட்டார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாங்கள் பிற்பகல் 2.10 மணிக்கு அங்கு சென்றோம். அதிலிருந்து பத்து நிமிடங்களுக்குள் துப்பாக்கி சத்தம் கேட்டதோடு, தூரத்தில் யாரோ ஒருவர் மேல் நோக்கி சுடுவதை பார்த்தேன்.

அப்போது உயிர் தப்பிப்பதற்காக என் அப்பா, குழந்தைகளுடன் காட்டுக்குள் ஓடினேன். நாங்கள் புல்வெளியை அடைந்தபோது ஒரு நபர் துப்பாக்கியுடன் நின்று எங்களை தடுத்து விட்டான். எங்களுடன் வேறு சிலரும் இருந்தனர்.

அவர்களிடம் கலிமா அல்லது வேறு ஏதாவது ஒன்றை சொல்லி இரு முறை கேட்டார். அது தெரியாது என சொன்னவர்களை சுட்டுக்கொலை செய்தார். அதில் என் தந்தையும் ஒருவர். உடனே நான் என் தந்தையை கட்டிப்பிடித்து அழுத போது அவர்கள் என் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார்.

அப்போது எனது மகன்கள் கதறி அழுவதை பார்த்ததும் அந்த நபர் காட்டுக்குள் ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து காஷ்மீரை சேர்ந்த 2 இளம் முஸ்லிம் டேக்ஸி ஓட்டுனர்களான முசாபிர் சமீர், முசாபிர் ஆகிய இருவரும் சகோதரியை போல அரவணைத்து என்னையும் குழந்தைகளையும் காப்பாற்றி விட்டனர்.

நான் தந்தையை இழந்து விட்டேன். ஆனால் காஷ்மீரில் எனக்கு இரண்டு சகோதரர்கள் கிடைத்துள்ளார்கள். அல்லாஹ் அவர்களை காப்பாற்றுவார் என்று நான் அவர்களிடம் சொன்னேன். உள்ளூர்வாசிகள் அனைவரும் எங்களுக்கு உதவி செய்தார்கள். எங்களுக்கு தங்குவதற்கு இடமும் கொடுத்தார்கள் என ஆர்த்தி கூறியுள்ளார்.