நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை  சேர்ந்த கணேசன் என்பவர் தனது நகை பட்டறையில் 32 வயதுடைய மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபாஷ் மேத்தாவை பணியாளராக வேலைக்கு வைத்திருந்தார்.

தொழில்நோக்கில் சில மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக, அண்மையில் 38.5 பவுன் தங்க கட்டிகளை அவரிடம் ஒப்படைத்திருந்தார். ஆனால் சுபாஷ் மேத்தா தங்கத்தை எடுத்துச் சென்றபின் திடீரென மாயமானார்.

அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. பின்னர் விசாரணையில், அவர் குறிப்பிடப்பட்ட இடத்திற்கு செல்லாமல் தங்கத்துடன் ஓடிப்போனது தெரியவந்தது. இதையடுத்து நகைப்பட்டறை உரிமையாளர் கணேசன், நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ் மேத்தாவை தேட ஆரம்பித்தனர். முதலில் சுபாஷ் மேத்தா குஜராத்தில் இருக்கிறாரா என சோதனை நடந்தது.  பின்னர் அவர் தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

மேற்கு வங்கத்திற்கு சென்ற போலீசார், அங்குள்ள போலீசாரின் உதவியுடன் சுபாஷ் மேத்தாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டதா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

தற்போது அவரை நாகர்கோவிலுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நகையை திருடிச் சென்ற சுபாஷ் மேத்தாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் நகை பட்டறை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது