
மும்பையில் அமெரிக்க தூதரகத்தின் அருகில் நிற்கும் ஓர் ஆட்டோ டிரைவர், ஆட்டோ ஓட்டாமல் இருந்தபடியே மாதம் ரூ.5 முதல் ₹8 லட்சம் வரை சம்பாதித்து வருகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் தயாரிப்பு தலைவர் ராகுல் ரூபானி தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விசா நேர்காணலுக்காக தூதரகத்திற்கு வரும் பயணிகள், பைகளை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லாததால் குழப்பமடைகின்றனர். அப்போது அந்த ஆட்டோ டிரைவர், “சார், பையை எனக்குக் கொடுங்க, பாதுகாப்பா வைச்சிருவேன், என் ஃபீஸ் ரூ.1,000 தான்” என அழைக்கிறார்.
பயணிகளும் அந்த நிமிடத்தில் நம்பிக்கை அடைந்துவிட்டு அவரிடம் பைகளை ஒப்படைக்கிறார்கள். ஒரு நாளைக்கு 20-30 பேர் வரை அவரது சேவையைப் பயன்படுத்துவதால், தினமும் ₹20,000 முதல் ₹30,000 வரை அவருக்கு வருமானம் கிடைக்கிறது.
தனது ஆட்டோவில் 30 பைகள் வைக்க முடியாததால், அந்த டிரைவர் அருகில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியின் தனியார் லாக்கர் வசதியை பயன்படுத்துகிறார். பைகள் சட்டப்படி பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.
“MBA இல்லை, ஸ்டார்ட்அப் யோசனையும் இல்லை, ஆனா வாழ்க்கையைப் புரிந்துகொண்டு ஒரு சிறந்த தீர்வு சொன்னவர்,” என ராகுல் கூறுகிறார். இது ஒரு சொந்தமாக உருவாக்கிய சாலையோர தொழில் யோசனை எனவும், உண்மையான தொழில் முனைவோர் மனப்பான்மை இதுதான் என்றும் பாராட்டுகிறார்.