
தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் யானை சின்னம் இருக்கும் நிலையில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியில் யானை சின்னம் இருப்பதால் அவர்களது சின்னத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக வெற்றி கழகத்தின் கொடிக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.
அதில் ஒற்றை யானை இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் இரட்டை யானை இருக்கிறது. இரண்டிற்கும் வேறுபாடு இருப்பதால் கண்டிப்பாக வாக்காளர்களுக்கு எந்த குழப்பமும் இருக்காது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடு போன்றவைகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் கொடி என்பது ஒரு கட்சியின் கொடி மட்டும் அல்ல, தமிழக கலாச்சார பெருமை, வரலாற்று பெருமை மற்றும் சமூகத்தில் பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மனு தொடர்பான விசாரணை விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.