இந்தியாவில் கூட மெட்ரோ ரயில்களில் உணவு சாப்பிடகூடாது. சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலில் டிபன் பாக்ஸில் சாப்பிட்ட ஒரு பெண்ணுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது லண்டன் மெட்ரோ ரயிலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண் ஒரு தட்டில் சோறு மற்றும் குழம்பு ஊற்றி கைகளால் சாப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண் செல்போனில் பேசியபடியே ஒரு தட்டில் கைகளால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இதனை அங்கிருந்தவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்த போதிலும் இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது. இதனை சிலர் இப்படி மெட்ரோ ரயிலில் இப்படி சாப்பிடுவது அநாகரிகமான செயல் என்றும் இதுபோன்று பொது இடங்களில் சாப்பிடக்கூடாது என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் சிலர் ஒரு இந்திய பெண் இப்படி சாப்பிடுவதை அவமானமாக பேசுவது சரியல்ல என விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு அந்த பெண் சாப்பிடும் போது அவரின் அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்தது தவறு என்ற கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இது தொடர்பான தகவலின்படி லண்டனில் மெட்ரோ ரயில்களில் உணவு சாப்பிட மற்றும் குடிநீர் அருந்த தடை விதிக்கப்படவில்லை. ஆனால் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. மேலும் தற்போது இந்த பெண்ணின் வீடியோ வைரலாகி பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகி விவாத பொருளாக மாறி உள்ளது.