
லக்கிம்பூரில் காடிபூர்வா கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும், வாலிபரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டதற்குப் பிறகு, கிராமத்துக்குத் திரும்பியபோது, குடும்பத்தினரும் கிராம மக்களும் இணைந்து அவர்களை தாக்கியதும், செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் மனம் உடைந்த அந்த ஜோடி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர். ஆனால் அருகில் இருந்த சில கிராம மக்கள் இருவரையும் மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்கள் இந்த செயலை கண்டித்து வருகின்றனர். ஒரு வருடத்திற்கு முன்பு, காதல் விவகாரம் தெரிந்ததும் இளம்பெண்ணின் சகோதரர் அவப்பெயரால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட கோபம், திருமணத்திற்கு பின்பு மேலும் பெரிதாகிப் போய், கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் இணைந்து, அவர்களை அவமானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். போலீசாரிடம் எந்த புகாரும் பெறப்படாத நிலையில், தன்னிச்சையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு கிராமத் தலைவர் வந்து, சூழ்நிலையை சமாதானப்படுத்தியதும், அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இது தொடர்பான வீடியோ வெளியாகியதும், காவல்துறையினர் சுயமாக விசாரணை தொடங்கியுள்ளனர்.