
பெங்களூருவில் வயிற்று வலி என கூறி லீவு எடுத்த ஒரு ஐடி நிறுவன ஊழியர், அதே லீவில் சுற்றுலா செல்லவதற்காக கூர்க் பகுதியை தேர்ந்தெடுத்ததாலேயே அவருக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷனை இழக்க நேர்ந்ததென சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு சம்பவம் பெரும் விவாதத்துக்கு இடமளித்துள்ளது.
பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் எளிதாக லீவு எடுப்பது போலவே, வேலை செய்யும் நபர்களும் அவ்வப்போது விடுப்புக்காக காரணங்கள் கூறுவதை காணலாம். ஆனால் நிறுவனங்களில் ஒரு வாரத்தில் சனி, ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறைகள் இருந்தபோதும், மீதமுள்ள நாட்களில் தவறான காரணங்களால் விடுப்பு எடுப்பது மேலாளர்களின் கவனத்திற்கு வருகின்றது.
இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஊழியர் வயிற்று வலி என கூறி வெள்ளிக்கிழமை ஒரு நாள் லீவு கேட்டுள்ளார். மேனேஜரும் “Take care” என பதிலளித்து, அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், அந்த ஊழியர் அந்த லீவைக் கையாளும் விதம் வேறுவிதமாக இருந்தது. லீவுடன் சனி, ஞாயிறு சேர்த்து 3 நாட்கள் விடுமுறையை பயன்படுத்தி, கூர்க் பகுதிக்குச் சுற்றுலா சென்று குளிர்ச்சியான வானிலையால் குஷியாக நடனமாடிக் கொண்டிருந்தபோது ஒரு ரீல்ஸ் வீடியோ எடுக்கப்பட்டு சமூக ஊடகத்தில் வைரலானது.
அந்த வீடியோ அவரது மேனேஜருக்கு சென்றதும், திங்கள்கிழமை அலுவலகத்திற்கு வந்த ஊழியரிடம் “உங்களுடைய வயிற்று வலி தீர்ந்துவிட்டது என நம்புகிறேன்” என சாட்டாக காட்டியதோடு, அதன் பிறகு அவர் எந்த சந்தர்ப்பத்திலும் வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்டு அனுமதி பெற முடியாது என கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் நெட்டிசன்களில் பெரும் விவாதத்தையும், சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.