மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், தன்னுடன் படிக்கும் இரண்டு மாணவிகளின் குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்தத் தண்ணீரை மாணவிகள் குடித்த பின்னரே அதில் ஏதோ கலந்திருப்பதை அறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆகஸ்ட் 17-ஆம் தேதி ஆரோன் வட்டாரத்தில் உள்ள பள்ளியில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது புகாரை பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். அப்போது, “வாய் சுவை சரியில்லையென்றால் பத்து ரூபாய் சாக்லேட் சாப்பிடுங்கள்” என்று தலைமை ஆசிரியர் கூறியதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாணவிகளின் புகாரை அலட்சியமாக கையாண்டதாக கூறப்படும் இந்த பதில், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியது. துணை வட்டாட்சியர் அதிகாரி, வட்டாட்சியர் மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரியை பள்ளிக்கு அனுப்பி மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். வட்டாரக் கல்வி அதிகாரி இரண்டு நாட்களுக்குள் விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சம்பவத்தைக் கண்டித்து ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாணவிகளின் குடும்பத்தினரும், உள்ளூர் மக்களும் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் அவரது பெற்றோர்களையும் அதிகாரிகள் அழைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் மாணவர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளியில் பதற்றம் அதிகரித்ததால் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு, மாணவிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
