பீகார் மாநிலம் மோதிஹாரியில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் திடீரென வீட்டை விட்டு காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது கணவரின் உறவினர் எனக் கூறப்படும் ரௌஷன் குமார் என்பவருடன் சென்றதாக கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் ரூ.1.20 லட்சம் பணமும் காணவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து ஹர்சித்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

போலீசில் அளித்த புகாரின்படி, அந்தப் பெண்ணுக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் வேலைக்காக தமிழ்நாட்டில் தங்கி பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் ரௌஷன் குமார் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கணவர் சந்தேகம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குடும்பத்தினருக்கும், கிராம மக்களுக்கும் தெரியவந்ததை தொடர்ந்து, பிரச்சினையை தீர்க்க பஞ்சாயத்தும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குப் பிறகும் இருவருக்கும் இடையிலான தொடர்பு தொடர்ந்ததாக கணவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இரண்டு குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு அந்தப் பெண் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்து அவர் சென்ற பிறகு நகைகள் மற்றும் சுமார் ரூ.1.20 லட்சம் பணமும் காணவில்லை என கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர் ரௌஷன் குமாரின் குடும்பத்தினரிடமும் விசாரித்துள்ளார். பின்னர்  காவல் நிலையத்தில் புகார் அளித்து, தனது மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கணவரின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் எதற்காக வீட்டை விட்டு சென்றார், பணம் மற்றும் நகைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.