மும்பைக்கு அருகிலுள்ள ராய்காட் மாவட்டத்தின் கலாப்பூர் பகுதியில், முறையான சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியால் துடித்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கிராம மக்கள் படுக்கை விரிப்பால் செய்யப்பட்ட தற்காலிக தொட்டிலில் சுமந்து சென்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த அனந்தா பர்தி என்பவரின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, சாலை வசதி இல்லாததால் அங்கு ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல் நிலவியது.

மேலும் சமீபத்திய கனமழையால் கிராமத்தை இணைக்கும் குறுகிய ஒற்றையடிப் பாதையும் அடித்துச் செல்லப்பட்டதால், வேறு வழியின்றி கிராம மக்கள் அவரைத் தூக்கிக் கொண்டு வழுக்கும் பாறைகள், கரடுமுரடான காடுகள் மற்றும் பொங்கி வழியும் ஓடைகளைக் கடந்து பல கிலோமீட்டர் நடந்து சவுக் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

“>

அதோடு மும்பைக்கு குடிநீர் வழங்கும் மார்பே அணைக்கு அருகிலும், இந்தியாவின் பரபரப்பான மும்பை-புனே விரைவுச்சாலைக்கு மிக அருகிலும் இந்த கிராமங்கள் அமைந்திருப்பதுதான் இதில் மிகப்பெரிய முரணாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாட்டின் முன்னணி விரைவுச்சாலையில் மக்கள் சுங்கக் கட்டணம் செலுத்திப் பயணிக்கும் வேளையில், அதற்குச் சில கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ள பழங்குடியினப் பகுதிகள் இன்றளவும் முறையான சாலை மற்றும் மின்சார வசதியின்றித் தவிப்பது அரசின் வளர்ச்சித் திட்டங்களின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இந்த அவல நிலை குறித்து அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, தங்களுக்கு அனைத்துப் பருவ காலங்களிலும் பயன்படுத்தக்கூடிய சாலை உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.