அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கிடைத்த அடுத்த நாளே அமைச்சராக பதவி ஏற்று இருப்பது காட்சிகளுக்கு அழுத்தத்தை உருவாக்காதா என கேள்வி எழுப்பி உள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசிய அண்ணாமலை கூறியதாவது, சுப்ரீம் கோர்ட்டு கூறியிருக்கும் கருத்து முக்கியமானது. ஜாமினில் வெளியே வந்தவுடன் அமைச்சர் பதவி முக்கிய துறை கொடுத்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் எனது மகன் உள்பட திமுகவில் உள்ள அமைச்சர்களை பார்க்கும்போது செந்தில் பாலாஜி தான் சிறந்தவர் என பேசியதை நான் இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். செந்தில் பாலாஜி வெளியே வந்து அமைச்சர் பதவி ஏற்ற பிறகு மேடையில் அமர்த்திக் கொண்டு வாசிக்கிற பாராட்டு பத்திரம். இது எல்லாம் சுப்ரீம் கோர்ட் கவனித்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு வேகமாக மாநில அரசு முக்கியமான பதவியை கொடுக்கிறது.
அப்படி என்றால் சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கோர்ட்டில் வேண்டுமானால் தப்பிக்கலாம். ஆனால் மக்கள் கோர்ட்டில் தப்பிக்க முடியாது. மக்கள் அதற்கான பெரிய பதிலை 2026 இல் கொடுப்பார்கள் என்ற பெரிய நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் 13-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. அன்று கடுமையான கருத்து தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
அன்றைய தினம் அவர் பொறுப்பில் இருக்க வேண்டுமா? துறையில் கையெழுத்து போட வேண்டுமா? நிதி சார்ந்த அதிகாரம் இருக்க வேண்டுமா? குற்றம் சாட்டப்பட்டவர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவர், முகாந்திரம் உள்ள வழக்கில் அரசு அதிகாரிகள் போல அதிகாரம் கொடுக்க வேண்டுமா? என பார்ப்பார்கள். அன்றைய தினம் நீதிபதிகள் என்ன சொல்வார்கள் என்பதை கேட்க நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.