செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை, புழல், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஏரி போன்றவை சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரிகளில் மொத்தம் 11.757 டி.எம்.சி தண்ணீர் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணமாக பலத்த மழை கொட்டியதால் குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அந்த வகையில் நேற்று காலை நிலவரப்படி 5 ஏரிகளிலும் மொத்தம் 10.793 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கடந்த மாதம் முதல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அதன் முழு கொள்ளளவான 35 அடி முழுவதும் நிரம்பியுள்ளது.

இதனால் அங்கிருந்து புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலமாக 550 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 23 அடியை எட்டியுள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இந்த ஏரிக்கு 246 கன அடி தண்ணீர் வருகிறது. இதில்  சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 130 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி. இந்நிலையில் புழல் ஏரிக்கு வினாடிக்கு 351 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 187 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனைதொடர்ந்து கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் 486 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 5 ஏரிகளில் 91.8 சதவீதம்  தண்ணீர் இருப்பு உள்ளதால் இந்த வருடம் முழுவதும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.