ஹரியானா மாநிலம் குருகிராமில் ரேபிடோ பைக் டாக்சி சேவை மூலம் பயணித்த பெண் ஒருவர், தவறான இடத்தில் இறக்கிவிடப்பட்டதால் ஓட்டுநருடன் காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தான் செல்ல வேண்டிய இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்தில் இறக்கிவிட்டதால் அதிருப்தியடைந்த அந்தப் பெண், தனது அதிருப்தியை ஓட்டுநரிடம் வெளிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. வாடிக்கையாளர் சேவை குறித்த இந்த மோதல், ஆன்லைன் டாக்சி சேவையைப் பயன்படுத்தும் மக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், அந்தப் பெண்ணின் பக்கமிருக்கும் நியாயத்தைப் புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். “அந்தப் பெண் ஓட்டுநரிடம் மரியாதைக் குறைவாகவோ அல்லது அநாகரிகமாகவோ நடக்கவில்லை.

மாறாக, தவறான இடத்தில் இறக்கிவிடப்பட்டதால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் தான் வெளிப்படுத்தியுள்ளார்” என்று இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரவு நேரத்திலோ அல்லது அறியாத இடத்திலோ தவறாக இறக்கிவிடப்படும் போது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பாதுகாப்பற்ற உணர்வும் மன உளைச்சலும் தான் இந்த விவாதத்திற்குக் காரணம் எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் ஆன்லைன் பைக் டாக்சி மற்றும் கேப் சேவைகளை நம்பி தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் சரியான சேவையையும் உறுதி செய்ய வேண்டியது நிறுவனங்களின் கடமையாகும்.

தவறான முகவரியில் இறக்கிவிடுவது என்பது வெறும் சேவை சார்ந்த குறைபாடு மட்டுமல்ல, அது பயணியின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர் சேவையில் கூடுதல் கவனமுடன் செயல்படுமாறு ஓட்டுநர்களுக்கு நெட்டிசன்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

“>