மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் காவல்துறை காவலர் ஒருவர் மீது மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் கட்டையால் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பரவி வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், சட்டம் ஒழுங்கு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கடமை வழியில் பணிபுரியும் காவல்துறையினர் மீது இதுபோன்ற வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று நிலைமையைக் கையாள முயன்ற காவலரிடம், குற்றஞ்சாட்டப்பட்ட ராகுல் தயாடே என்ற இளைஞர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அந்த இளைஞர், அதிகாரியின் சொற்களுக்குச் செவிசாய்க்காமல் வாக்குவாதத்தை வளர்த்துள்ளார்.

எதிர்பாராதவிதமாக, அருகிலிருந்த ஒரு மரக்கட்டையை எடுத்து அவர் காவலரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் அந்தக் காவலர் காயமடைந்த நிலையில், இந்த முழு சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட ராகுல் தயாடேவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மீதே இதுபோன்று போதையில் இருக்கும் நபர்கள் தாக்குதல் நடத்துவது அவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

“>