ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட போவதில்லை. இந்த நிலையில் தமிழக வெற்றிக்காக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக வெற்றி கழக தலைவர் அவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வெளியிட்ட கட்சி தொடக்க அறிவிப்புக்கான முதல் அறிக்கையிலேயே வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயகம் மரபுகளை பின்பற்றாமல் தங்களின் அதிகாரம் பலத்துடன் பொதுத்தேர்தல்களை காட்டிலும் ஜனநாயகத்திற்கு எதிராக பல மடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதன் அடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோட்டில் கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் கழக தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.