தமிழக சட்டப்பேரவை கூட்டம் திங்கட்கிழமை தமிழக ஆளுநர் ஆர். என் ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ள உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் என்னும் வார்த்தைகள் அடங்கிய பல வரிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்து உள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனை கண்டித்து ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்த போது ஆளுநர் ரவி அங்கிருந்து பாதியிலே வெளியேறி சென்றுள்ளார். தேசிய கீதம் பாடப்படும் முன்பே ஆளுநர் ரவி அங்கிருந்து புறப்பட்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை, ஆழ்வார்பேட்டை, கிண்டி, அண்ணா அறிவாலயம், செம்மொழிப் பூங்கா, சைதாப்பேட்டை போன்ற இடங்களில் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து #Getout Ravi என்று ட்விட்டரில் நேற்று ட்ரெண்டிங் செய்யப்பட்ட வார்த்தையை பதிவிட்டவர்களுக்கு நன்றி கூறும் விதமாக தி.மு.க சார்பாக பிரம்மாண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் அரசியல் கட்சிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.