விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு 15 வயதுடைய குரு பிரியா என்ற மகளும், 8 வயதுடைய சபரிநாதன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் முத்துக்குமாரி 10-ஆம் வகுப்பும், சபரிநாதன் 8-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். முத்துமாரி தையல் வேலை பார்க்கிறார்.

இந்த நிலையில் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்த கணேசன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். எனவே அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. கணேசன் குடும்ப செலவு மற்றும் மருத்துவ செலவுக்காக 2 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் முத்துமாரி மட்டுமே பணிக்கு சென்று வந்ததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் நேற்று காலை குரு பிரியாவுக்கும் சபரிநாதனுக்கும் விஷம் கலந்த இனிப்பை கொடுத்துள்ளனர். அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் அதே விஷம் கலந்த இனிப்பை சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் நான்கு பேரும் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முத்துகுமாரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கணேசன் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குரு பிரியாவும், சபரிநாதனும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினை காரணமாக தம்பதியினர் தங்களது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.