பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில், காவல்துறையின் டயல் 112 குழுவினர் பொதுமக்களிடம் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜூன் 12-ஆம் தேதி இரவு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கஜ் குமார் என்ற நபர் தனது ஊழியருடன் ஹாஜிபூருக்குச் செல்லும் வழியில், நயாகான் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பஹெர்வா பகுதியில் போலீசார் வாகனச் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, பங்கஜ் மீது கஞ்சா வைத்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு பதிவு செய்து, 10000 ரூபாய் அபராதம் செலுத்தவில்லை என்றால் சிறைக்கு அனுப்புவோம் என மிரட்டினர். பின்னர் அவரது ஊழியரை கைது செய்து, விடுவிக்க ரூ.5,000 லஞ்சமாக கேட்டனர். பங்கஜ், மூவாயிரம் ரூபாய் கொடுத்த பின்னர் தான் விடுவிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

விசாரணையை தொடர்ந்து, வழக்கு எண் 100/25 என்ற அடிப்படையில் நயாகான் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சஷி பூஷன் குமார், முன்னாள் ராணுவ வீரரான டிரைவர் ஜெய் பிரகாஷ் ராய் மற்றும் பி.எச்.ஜி வீர பகதூர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்படும் போலீசாரே, பொதுமக்களிடம் மிரட்டல் மற்றும் கொள்ளையில் ஈடுபடுவது காவல்துறையின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சரண் காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், “போக்குவரத்தின்போது அல்லது பொதுவாழ்வில் காவல்துறையினர் சட்டவிரோதமாக பணம் பறிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தால், உடனடியாக புகார் அளிக்கலாம்.

உரிய விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையின் ஒழுக்கத்தை காக்கும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.