சத்தீஸ்கர் மாநிலத்தில்  உள்ள சர்குஜாவில் தற்கொலைக்கு முயன்ற யூடியூபரை போலீசார் அதிரடியாக காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாயாபூர் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், தனது நண்பர் ரூ.2 லட்சம் திருப்பித் தரவில்லை என்ற காரணத்தால், இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார்.

இதைக் கண்ட மெட்டா நிறுவனம் தற்காலிக எச்சரிக்கை வழங்கும் அவசர குழு மூலம், மத்தியப் பிரதேச சைபர் செல்லுக்குத் தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச சைபர் காவல்துறை அந்த இளைஞரின் வீடியோவையும், சமூக வலைதள சுயவிவர விவரங்களையும் தொழில்நுட்பமாக பகுப்பாய்வு செய்து, அவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் மாயாபூரைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தது.

உடனடியாக இந்தூர் சைபர் எஸ்.பி மூலம் சர்குஜா சி.எஸ்.பிக்கு தகவல் அனுப்பப்பட்டு, போலீசார் நேரில் சென்று அந்த இளைஞரை பாதுகாப்பாக மீட்டனர். மேலும் தற்கொலை முயற்சிக்கு முக்கியக் காரணமாக, தன் நண்பரிடம் கொடுத்திருந்த ரூ.2 லட்சம் திரும்பவில்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த இளைஞருக்கு தற்போது மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் மெட்டாவின் அவசர தற்கொலை எச்சரிக்கை குழு பல்வேறு உயிர்களை காப்பாற்றியுள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதங்களில் மத்தியப் பிரதேசத்தில் சிங்க்ரௌலி, இந்தூர், மொரேனா, மைஹாரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மற்றும் 1 பெண்ணும் தற்கொலைக்கு முயன்ற நிலையில், மெட்டாவின் எச்சரிக்கையால் போலீசாரால் காப்பாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளத்தில் பகிரும் உணர்வுப் பதிவுகள், காவல்துறையுடன் இணைந்து செயல்படும் நவீன தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.