நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள மேலராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா பானு (30). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்த போது ரீல்ஸ் வீடியோ ஒன்று எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ரயிலில் பயணம் செய்த போது ஆபத்தான முறையில் கதவு அருகே தொங்கியபடி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ வைரலானது. அதனை பார்த்த பலரும் இதுபோன்று ரீல்ஸ் செய்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் ரயிலில் இதுபோன்று நடந்து கொள்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

இதனை அடுத்து ஷகிலா பானு அந்த வீடியோவை நீக்கியுள்ளார். மேலும் தான் செய்தது தவறு என மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் ரயிலின் படிக்கட்டுகளில் தொங்கியபடி வீடியோ வெளியிட்டது தவறு எனவும், அதனை எதார்த்தமாகவும், விளையாட்டாகவும் செய்தேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் அது இவ்வளவு பெரிய விஷயமாகும் என நினைக்கவில்லை யாரும் இது போன்ற ரீல்ஸ் எடுக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் அந்த ரீல்ஸ் எந்த ரயிலில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் நாமக்கல்லில் இருந்து பயணம் செய்த ஷகிலா பானு படிக்கட்டுகளில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதன் பின் ஷகிலா பானு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.