மும்பை அருகே நலசோபாராவில் இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதற்காக, 24 வயது இளைஞர் பிரதிக் வாகே, அந்தப் பெண்ணின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதிக், பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதை அவர் காதலனான பூஷன் பாட்டிலிடம் தெரிவித்ததால், பூஷனும் அவனது நண்பர்களும் சேர்ந்து பிரதிக்கை மடக்கி மிரட்டி, கொடூரமாக அடித்து உயிரை பறித்தனர்.

இந்தத் தாக்குதல் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துலிஞ்ச் காவல் நிலைய போலீசார், பூஷன் உட்பட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைரலான வீடியோவில், பிரதிக் சட்டையை கழற்றி, கைகளை கூப்பி கெஞ்சியபோதும், கும்பல் அவனை விடாமல் தாக்குவது தெளிவாக தெரிகிறது. வாக்குவாதத்தின் மத்தியில் பிரதிக் தரையில் சுருண்டு விழும் வரை அடி உதையால் தாக்கப்பட்டான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவன் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், சிகிச்சையின் போது உயிரிழந்தான்.

இதற்கிடையில், புனேவில் வேறொரு சம்பவத்தில், தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இரு நண்பர்கள் மீது 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவருக்கு மூக்கு எலும்பு முறிந்து, மற்றொருவருக்கு தோள்பட்டை பெயர்ந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய வன்முறைகள், சமூகத்தில் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.