இந்தியாவில் ரயில் நிலையங்களில் மற்றும் ரயில்வே பாதைகளில் ஆயிரக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ரயில் நிலையங்களின் தூய்மை மற்றும் பராமரிப்பு குறித்து தொடர்ந்து ரயில்வே துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்று ரயில்வேதுறையின் சுகாதாரம் குறித்து கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது.

இந்த வீடியோவில் ரயில்வே ஊழியர் ஒருவர் ஓடும் ரயிலில் உள்ள சாப்பாட்டு குப்பைகளை வெளியே எறிவதை காணலாம். இதனை பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்த போதும் அந்த ரயில்வே ஊழியர் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் சிரித்துக்கொண்டே ரயிலில் உள்ள அனைத்து குப்பைகளையும் வெளியே எறிந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரயில்வே ஊழியர்களே தண்டவாளத்தில் குப்பைகளை வீசுகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.