உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மௌயிமா ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தபின், அதற்கு மாறாக கர்ப்பமடைந்தார். பிறகு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இது ஏற்பட்டதாகக் கூறிய அந்த பெண், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் மருத்துவ அலட்சியைக் கடுமையாக கண்டித்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று நிரந்தர லோக் அதாலத் தீர்ப்பளித்துள்ளது.

நிரந்தர லோக் அதாலத் தலைவர் விகார் அகமது அன்சாரி தலைமையில் நடைபெற்ற அமர்வில், அந்த பெண் மனுதாரருக்கு ரூ.2 லட்சம் ஒருமுறை இழப்பீடு, மகளுக்கு 18 வயது ஆகும் வரை அல்லது பட்டப்படிப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.5,000 பராமரிப்பு தொகை, மேலும், உடல் மற்றும் மன துன்பங்களுக்கு ரூ.20,000 நஷ்டஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மனுதாரராக உள்ள அனிதா என்ற பெண், ஏற்கனவே  குழந்தைகள் உள்ளதால் இனி குழந்தை வேண்டாம் எனக் முடிவெடுத்து சுகாதார நிலையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருந்தார். சிகிச்சையின் பிறகு, மருத்துவர்கள் கர்ப்பமாகும் வாய்ப்பே இல்லை என்று உறுதியளித்திருந்தனர்.

ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு உடல்நிலை மாற்றங்களை அறிந்த அனிதா, அல்ட்ராசவுண்ட் சோதனையின் மூலம் 16 வாரங்கள் 6 நாட்கள் கர்ப்பம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில், மருத்துவர் குழுவின் அலட்சியத்தினால் கருத்தடை முறையாக செயல்படாததையும், அதன் விளைவாக பெண் மீதான சமூக, பொருளாதார சுமையை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது. மேலும், மருத்துவர்கள் சரியான தகவல் தராததாலும், அவசர ஆலோசனை வழங்காததாலும் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு மருத்துவ முறைகள் மீதான பொறுப்புணர்வை வலியுறுத்துவதோடு, பொதுமக்கள் உரிமைகளுக்கு நீதிமன்றம் உறுதுணையாக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.