
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (50). இவருக்கு சரஸ்வதி (47) என்ற மனைவி இருந்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் பால்ராஜ் ஒரு வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். அப்போது தன்னை சீக்கிரமாக ஜாமினில் எடுக்க வேண்டும் என தனது மனைவி சரஸ்வதியிடம் கூறியுள்ளார்.
ஆனால் சில காரணங்களால் சரஸ்வதியால் ஜாமினில் எடுக்க முடியாமல் போனது. பின்னர் காலதாமதம் ஆகி ஜாமினில் வெளியே வந்த பால்ராஜ் கோபத்தில் தனது மனைவிக்கு வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியுள்ளார்.
அதனால் பதறிப்போன சரஸ்வதி கத்திக்கூச்சலிட அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சரஸ்வதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பால்ராஜன் மகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.