சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த “பிச்சைக்காரன்” படம் கடந்த 2016ம் வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி, படத்தை இயக்கியும் வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இப்போது அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி தன் சமூகவலைதளப்பக்கத்தில் உடல் நலம் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, “மலேசியாவில் படப்பிடிப்பின்போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து நான் குணமடைந்து வருகிறேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்திருக்கிறேன். வெகு விரைவில் அனைவரிடமும் பேசுவேன். உங்கள் அனைவரின் ஆதரவு மற்றும் என் உடல்நிலை குறித்த அக்கறைக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.