காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகளை ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பதிலடி கொடுத்தது. அதன் பின் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்புடைய யூடுப்பர் ஜோதி மல்கோத்ரா உட்பட பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சமீப காலத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து தற்போது இந்திய ராணுவத்தின் வீரரான குர்பிரீத் கோபி என்பவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பஞ்சாப் அமிர்தரஸ் நகர காவல் துறை மூத்த காவல் சூப்பரண்ட் மணிதர் சிங் கூறியதாவது, “பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் இராணுவ வீரர் குர்ப்ரித் கோபி தொடர்பில் இருந்துள்ளார்.

அது அவரது பென்டிரைவ் உள்ளிட்டவற்றின் உதவியுடன் வெளிவந்துள்ளது. அவர் தனக்கு கிடைத்த ரகசிய மற்றும் உளவு தகவல்களை ஐஎஸ்ஐ அமைப்புக்கு  தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தகவலில், அவர் ஜம்முவில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இந்தியாவின் நிறைய ரகசிய தரவுகளை பாகிஸ்தானிய உளவுத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளோம். மேலும் அவரிடம் கூட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கோபி தன்னுடைய பாகிஸ்தான் நண்பரான சாஹில்மசீஎன்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் இணைந்து தேசவிரோத செல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது சாஹிலும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரிடமும் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இருவரும் தொடர்பு கொள்வதற்காக பயன்படுத்திய இரண்டு மொபைல் போன்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் ராணா ஜாவித் என்ற ஐஎஸ்ஐ அமைப்பின் முக்கிய நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என பஞ்சாப் டிஜிபி தெரிவித்துள்ளார்.