
சுனாமி என்னும் ஆழிப் பேரலை கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி உலகையே உலுக்கியது. இந்த நாள் கருப்பு தினமாக அனுசரிக்கபடுகிறது. சுனாமியால் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிர் பறிபோனது. இந்த துயர சம்பவம் நடைபெற்று 20 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. இந்த சுனாமி தாக்குதலின் போது அந்தமான் தீவில் உள்ள ஹட் பே தீவில் வசித்து வந்த நமிதா ராய் (26) என்ற பெண் தனது குடும்பத்தினருடன் உயிர்பிழைத்து பாம்புகள் அதிகம் உள்ள காட்டில் தஞ்சம் புகுந்தார். இங்கு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் அந்த அடர்ந்த காட்டிலேயே ஒரு மகனையும் பெற்றெடுத்துள்ளார்.
அவருக்கு “சுனாமி ராய்” என பெயரிட்டுள்ளனர். இதுகுறித்து நமிதா ராய் உருக்கமான பதிவு ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார். இதில் அவர் கூறியதாவது,”அந்த மோசமான நாளை நினைத்தாலே நடுக்கமாக இருக்கிறது. நான் கர்ப்பமாக இருந்தேன். அப்பொழுது கடல் திடீரென நாங்கள் இருக்கும் பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவு உள்வாங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். திடீரென பயங்கர சத்தத்தோடு எங்களது தீவை நோக்கி ஒரு பெரிய கடல் அலை வருவதை பார்த்து பயந்தோம். அப்போது பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவதை பார்த்ததும் நான் மயங்கி கீழே சரிந்தேன்.
சுயநினைவு வந்தவுடன் எனது கணவர் மற்றும் மூத்த மகனுடன் அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக்கொண்டோம். இங்கு எந்தவித உதவியும் இன்றி எனக்கு பிரசவம் நடைபெற்றது. இதனால் அதிக ரத்தம் வெளியேறி உடல்நிலை மோசம் அடைந்தது. பின்னர் அரசின் உதவியால் சிகிச்சைக்காக கப்பலில் எட்டு மணி நேரம் பயணம் செய்து உயிர் காப்பாற்றப்பட்டேன். என தான் அனுபவித்த பயங்கரமான நாட்களை கூறியுள்ளார். நமிதா ராயின் மகன் சுனாமி ராய் கூறியதாவது, எனது அம்மா மிகவும் வலிமையானவர். என் தந்தை இறந்த பிறகு எங்களை வளர்க்க மிகவும் கடினமாக உழைக்கிறார். நான் கடல் ஆய்வாளராக விரும்புகிறேன். எனக் கூறியுள்ளார்.