மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கர்பா ஆடிவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், ஜானகி ராமன் கல்லூரி அருகே வாகனம் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால், கூட்டத்தில் இருந்தவர்கள் யாரும் முதலில் அவருக்கு உதவ முன்வரவில்லை. இந்த நிலையில், டிராஃபிக் கான்ஸ்டபிள் ஜிதேந்திர துபே, தனது தோளில் அந்தப் பெண்ணைத் தூக்கி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அனுமதித்தார். இந்த உணர்ச்சிகரமான காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

நவராத்திரி கொண்டாட்டத்தால் கூட்டமும், போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்ததால், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகியிருக்கும் என்பதை உணர்ந்த ஜிதேந்திர துபே, எந்த தயக்கமும் இன்றி அந்தப் பெண்ணை தோளில் சுமந்து மருத்துவமனைக்கு ஓடினார்.

இந்த வீடியோவில், மற்றொரு பெண்ணும் அவருடன் உடன் செல்வது பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. ஜிதேந்திராவின் உடனடி செயல்பாடு காரணமாக, காயமடைந்த பெண்ணுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைத்தது. இவரது மனிதாபிமான செயல், சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.