நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பெரியமணலி பகுதியில் வசிக்கும் நவீன்குமார் (29) என்பவர், கனரா வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி, தனது திருமணத்திற்கு கொங்குநாடு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதே மையத்தில், நாமக்கல் இராமாபுரம்புதூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் தனது மகள் தன்வாத்தினிக்கு வரனாக நவீன்குமாரை தேர்வு செய்தார். பதிவு செய்த தகவலின் அடிப்படையில், தன்வாத்தினி ஒரு கோட்டாட்சியா் என தெரிவிக்கப்பட்டது. ஜாதகப் பொருத்தம் பார்த்து இருவருக்கும் 2024 ஜூன் 12ஆம் தேதி வையப்பமலையில் திருமணம் நடைபெற்றது.

திருமண அழைப்பிதழிலும், பெண் பொள்ளாச்சி கோட்டாட்சியா் என பெயர் பதிக்கப்பட்டது. ஆனால், நவீன்குமாரின் நண்பரின் தந்தை பொள்ளாச்சி கோட்டாட்சியா் அலுவலகம் சென்றபோது, தன்வாத்தினி என்ற பெயரில் அங்கு யாரும் பணியாற்றவில்லை என தெரியவந்தது. இதனால் சந்தேகத்தில் விழுந்த நவீன்குமாரும் அவரது குடும்பத்தினரும் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து விசாரித்தனர். தன்வாத்தினி ஒரு போலியான அடையாள அட்டையும், தமிழக தலைமைச் செயலாளர் கையொப்பமிட்டதாகக் கூறப்படும் சான்றிதழும் காட்டியதன் பின்னர் நவீன்குமார் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சவீதா தலைமையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் தன்வாத்தினியின் அனைத்து சான்றிதழ்களும் போலியானவை என உறுதி செய்தனர். தன்னை அரசு அதிகாரி என மோசடி செய்து திருமணம் செய்துள்ளதாக நவீன்குமார் புகார் அளித்த நிலையில், தன்வாத்தினியை வியாழக்கிழமை போலீசார் கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது, தன்வாத்தினி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை எழுதி நேர்முகத்தேர்வு வரை சென்றவர் என்றும், ஒரு மூன்றாம் நபர் மூலம் போலி சான்றிதழ்கள் அவரிடம் வந்ததாக கூறியுள்ளாராம். இந்த ஆவணங்களை வழங்கிய நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.