
நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அவருடைய மனைவி பாண்டிமீனா மற்றும் 2 வயது குழந்தை யாசின் ராமுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அவர்கள் வலி தாங்க முடியாமல் சத்தமிட்ட நிலையில் அங்குள்ள அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் பாண்டி மீனாவிற்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அங்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.