கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் பிரம்மவரா தாலுகா பகுதியில் ஹிலியானா கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் பூஜாரி(42). இவருக்கு ரேகா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரேகா இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை ஆர்வமாக பார்த்து வருவதை அவரது கணவர் கண்டித்துள்ளார்.

இருந்தும் ரேகா அதனை கேட்காமல் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பார்ப்பதையே வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். சம்பவ நாளொன்றும் இரவு கணவர் வீட்டிற்கு வந்தும் கவனிக்காமல் ரேகா இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்ளை பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட கணேஷ் ஆத்திரத்தில் கத்தியால் ரேகாவின் கழுத்தில் சராமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து கணேஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தைப் போன்றே சாமராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள பி.ஜி பாலியா பகுதியை சேர்ந்த குமார் (33) என்பவரின் மனைவி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றம் செய்வதையே வேலையாக வைத்து வந்தார்.

அதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இருந்தும் குமாரின் மனைவி அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வீடியோ எடுத்து பதிவிடுவதை செய்து வந்தார். இன்ஸ்டாகிராமில் குமாரின் மனைவி வெளியிடும் வீடியோக்களை பார்த்து குமாரின் நண்பர்கள் அவரை அடிக்கடி கேலி செய்துள்ளனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு குமார் ஆளாகினார். இதனை அடுத்து சம்பவ நாளன்று குமார் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.