
ஐசிசி சாம்பியன் டிராபி 2025 போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலி அபாரமான சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு அவுட் ஆகி இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் லெஜெண்ட் கிரிக்கெட் நட்சத்திரமாக வலம் வந்த இன்ஸமாம் உல் ஹக் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமூக ஊடக வீடியோ ஒன்றில் இது குறித்து அவர் கூறியதாவது,”தற்போது உள்ள பாகிஸ்தான் அணியும், தேர்வு குழுவையும் மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும். இது முதல் முறையல்ல கடந்த ஆசிய கோப்பை, உலக கோப்பை, டி20 உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் பாகிஸ்தான் தொடர்ந்து ஏமாற்றமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது”என விமர்சித்திருந்தார். மேலும் பாகிஸ்தான் எந்த ஒரு முக்கியமான தொடரிலும் தங்களை தக்க வைத்துக் கொள்ளவில்லை. சிறிது அழுத்தம் வந்தால் கூட முழுவதுமாக ஆட்டத்தை இழந்து விடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் பலரும் இது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். பயனர்கள் பலரும் “முதலில் அனுபவம் இல்லாத உங்களது சகோதரப் பேரன் இமாமை அணியிலிருந்து நீக்குங்கள்” என கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் “தயவு செய்து அணியின் நிலையை பற்றி பேசும் முன் நீங்களே இந்தியாவுக்கு எதிராக எத்தனை உலகக்கோப்பை போட்டிகளில் வென்றீர்கள்” என்பதை நினைத்து பாருங்கள் என கோபமாக விமர்சித்துள்ளனர். “பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் முன்னாள் தேர்வு குழுவாக இருந்த உங்கள் காலத்தில் செய்யப்பட்ட முறையற்ற மதிப்பீடாகும்” என பலரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.