தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் கவர்னர் ஆர் என் ரவி உரையாற்ற இருக்கிறார். இது 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுபடி கவர்னர் சட்டசபைக்கு வந்து உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைப்பார். அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வாசலில் நின்று வரவேற்க வேண்டும். அதன் பின் அவருக்கு பூங்கோத்து கொடுத்து சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். அதன் பின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். இதையடுத்து அரசின் உரையை கவர்னர் வாசிப்பார். இதை தொடர்ந்து சபாநாயகர் அதை தமிழில் வாசிப்பார்.

கடந்த ஆண்டு சட்டசபையில் கவர்னர் அரசின் முழு உரையையும் வாசிக்கவில்லை. முதல் மற்றும் கடைசி பக்கத்தை மட்டும் வாசித்து விட்டு அமர்ந்தார். அதோடு அவரது சொந்த கருத்தையும் பேசியதால் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவர் கூட்டம் முடிவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேறினார். அதன் பின் அரசுக்கும் அவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. பின்னர் இணக்கமான சூழல் உருவானது. இந்த ஆண்டின் சட்டசபையில் முதல் கூட்டம் என்பதால் அவரை உரையாற்ற வரும் படி கவர்னர் ஆர். என் ரவியை சபாநாயகர் அப்பாவு இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். கிண்டி ராஜ் பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சட்டசபைச் செயலாளர் சீனிவாசனும் உடன் இருந்தார்.