ஒடிசா மாநிலத்தின் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள சிங்கஜார் கிராமத்தைச் சேர்ந்த 95 வயதான மூதாட்டி சபித்ரி மஜ்ஹி, கிராம சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக நிலங்களை தானமாக கொடுத்திருந்தார். பல வருடங்களாக விளையாட்டு மைதானம் இல்லாமல் திணறி வந்த கிராமக்குழந்தைகளுக்காக, சபித்ரி மஜ்ஹி தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். இந்த நிலத்தில் கிரிக்கெட், கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

சபித்ரி மஜ்ஹி கூறியதாவது, “எங்கள் கிராமக் குழந்தைகள் விளையாடுவதைக் காணும் போது எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர்கள் வெற்றி பெற்றால் என் மகிழ்ச்சி மேலும் கூடுகிறது. நான் அளித்த நிலத்தில் அவர்கள் ஆரோக்கியமாக விளையாடும் சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்தேன்,” என உருக்கமாக தெரிவித்துள்ளார். தற்போது அந்த நிலத்தில் அரசு விளையாட்டு அரங்கம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் அரசு தரப்பை கோரிக்கை விடுத்துள்ளனர்.

சபித்ரி மஜ்ஹி இதற்கு முன்பு தனது நிலங்களில் பள்ளி, கல்லூரி, கோயில் ஆகியவற்றுக்காக இடமளித்து சமூக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கணவர் நிலம்பர் மஜ்ஹி 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், தனக்கே உரித்தான நிலங்களை சமூக நலன் கருதி வழங்கும் சபித்ரியின் இந்த உன்னத செயல், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.