சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த 19ஆம் தேதி என தொடங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 113 ரன்கள் குவித்தார். அதன் பிறகு முதல் இன்னிங்ஸ்சில் வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களில் சுருண்டது. பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட் வரை வீழ்த்தினார்.

இதனையடுத்து இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 287 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மன் கில் 119 ரன்களும் ரிஷப் பண்ட் 109 ரன்களும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடங்கிய வங்கதேச அணியால் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. இறுதியில் வங்கதேச அணி 62.1 ஓவர்களில் அனைத்து விக்கீட்டுகளையும் இழந்து 234 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதனால் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கடந்த 1932 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வரும் நிலையில் இதுவரை 580 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 179 வெற்றிகளையும் 178 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இதில் 222 போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில் ஒரு போட்டி சமனில் முடிந்தது. மேலும் இந்த வெற்றியையும் சேர்த்து 92 வருடங்களில் முதல் முறையாக இந்தியா தோல்வியை விட வெற்றியை அதிகம் பதிவு செய்துள்ளது.