கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் (Parappana Agrahara Central jail) பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் விஐபி கவனிப்பு குறித்த குற்றச்சாட்டுகளை எழுப்பும் அதிர்ச்சிகரமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இந்த வீடியோவில், தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக ஆள் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஸுஹைப் மன்னா மற்றும் தொடர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக் குற்றவாளியான உமேஷ் ரெட்டி ஆகியோர் சிறைக்குள் சுதந்திரமாக செல்போன்களைப் பயன்படுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதுதொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து, சிறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர். இந்தச் சம்பவத்தைக் குறித்துக் கருத்து தெரிவித்த கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, “இதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்,” என்று கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

குறைந்தது ஒரு நிமிடம் ஓடும் வீடியோவில், பெங்களூரைச் சேர்ந்தவரும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்காக நிதி திரட்டி இளைஞர்களை சிரியாவிற்கு அனுப்பியவருமான ஸுஹைப் மன்னா, தேநீர் அருந்திக்கொண்டே செல்போனைப் பயன்படுத்துகிறார். இன்னொரு வீடியோ கிளிப்பில், தொடர் பாலியல் பலாத்காரம் மற்றும் 18 கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட உமேஷ் ரெட்டி ஒரே நேரத்தில் மூன்று செல்போன்களைப் பயன்படுத்தியுள்ளார்.

உமேஷ் ரெட்டிக்கு உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவர். சிறைக்குள் செல்போன்கள் மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்தப்படுவது குறித்துச் சிறை ஊழியர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது என்றும் தகவல் வெளியானது. இந்த வீடியோக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா உடனடியாக இந்த விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.