நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெரிய தும்பூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கவாஸ்கர் (45)- உதய ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். கவாஸ்கர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலை செய்வதற்காக சென்று உள்ளார்.

ஆனால் அங்கு அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம், ஆடுகளை மேய்த்து அவற்றை பராமரிக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த வேலையை செய்யாமல் மறுத்துள்ளார். அதற்காக அங்கு உள்ள பெண்கள் அவரை அடித்து துன்புறுத்தி வலு கட்டாயமாக வேலை செய்ய வைத்துள்ளனர். இது குறித்து கவாஸ்கர் தனது மனைவி உதயஜோதியிடம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தனது நிலைமையை செல்போனில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து உதயச்ஜோதி நாகப்பட்டினத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் கணவரின் நிலைமை குறித்து கூறி காப்பாற்றுமாறு உதவி கேட்டுள்ளார். அவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள செந்தமிழர் பாசறை அமைப்பு மூலம் கவாஸ்கரை  மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இது குறித்து சட்ட ரீதியாக முயற்சிகள் எடுத்தும் எந்தவித பலனும் இல்லை. அதனால் அந்த ஒட்டக பண்ணை உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசி விசா கட்டணம் ரூபாய் 1 1/2 லட்சத்தை கொடுத்துள்ளனர். அதன் பின் கவாஸ்கர்  சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதன்பின் நேற்று விமான மூலம் திருச்சி வந்த அவரை அவரது குடும்பத்தினர் கண்ணீரோடு வரவேற்றனர்.

குடும்பத்தினரை பார்த்ததும் கவாஸ்கரும் கதறி அழுதார். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தி குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். சவுதி அரேபியாவில் இருந்து தான் அனுபவித்த கொடுமைகளை கவாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதில் அவர் கூறியதாவது, சவுதியில் அதிகாலை 4.30 மணி அளவில் சுமார் 3.30 மணி நேரம் நடந்து சென்று ஒட்டகம், ஆடுகளை மேய்க்க வேண்டும். பின்னர் அவற்றை சுத்தம் செய்வது, தீவனம் வைப்பது என பராமரிப்பு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும். இல்லையெனில் பண்ணையில் உள்ள 2 பெண்கள் கொடூரமாக அடித்து துன்புறுத்துவார்கள் வீட்டிற்கு கூட ரகசியமாக தான் செல்போனில் பேசுவேன் அப்படி ஒரு முறை பேசும்பொழுது எனது சிம் கார்டையும் பறித்து விட்டனர். பல போராட்டங்களுக்குப் பிறகு தன்னை அங்கிருந்து மீட்ட அனைவருக்கும் நன்றி என கண்ணீர் மல்க கூறினார்.