சுட்டெரிக்கும் வெயிலுக்கும் பரந்த பாலைவனங்களுக்கும் பெயர் போன சவூதி அரேபியாவில், தற்போது பெய்து வரும் கடும் பனிப்பொழிவு உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள தபூக் மாகாணத்தில் உள்ள ஜபல் அல்-லாவ்ஸ் மற்றும் ட்ராஜெனா மலைப்பகுதிகள் முழுவதும் பனி படர்ந்து வெள்ளை நிறப் போர்வையைப் போர்த்தியது போன்ற கண்கொள்ளாக் காட்சியாகக் காட்சியளிக்கின்றன.
#UPDATE: Snow Falls in Saudi Arabia’s Al-Ahsa
Residents of Al-Ahsa in #SaudiArabia’s Eastern Province witnessed rare snowfall as a strong cold wave swept the region.
Footages shared online showed the normally warm desert area lightly covered in snow, surprising locals and… pic.twitter.com/Z3puDimQE7
— Mowliid Haji Abdi (@MowliidHaji) December 18, 2025
மலைச்சிகரங்கள் மற்றும் மணல் குன்றுகள் மீது பனி கொட்டிக் கிடக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன. இதைப் பார்த்த பலரும் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்று சந்தேகம் கிளப்பிய நிலையில், இது உண்மையான இயற்கை நிகழ்வுதான் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
தபூக் பகுதியில் உள்ள ஜபல் அல்-லாவ்ஸ் மலையில் புதன்கிழமை அன்று கடும் பனிப்பொழிவு பதிவானதுடன், அங்கு வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி செல்ஷியஸ் வரை சரிந்துள்ளது. கடும் பனிமூட்டம் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய இந்த வானிலை மாற்றத்தால் சாலைகளில் போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
சைபீரியாவிலிருந்து வீசும் கடும் குளிர் அலை மத்திய தரைக்கடல் ஈரப்பதத்துடன் கலந்ததே இந்தத் திடீர் பனிப்பொழிவுக்குக் காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். இந்த அரிய நிகழ்வைக் காண உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் திரண்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், வழுக்கும் சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
