
ஹைதராபாத் அருகிலுள்ள பந்தலகுடா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் முகமது சகாரியா(26) என்பவருக்கும் கடந்த 13 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து பந்தலகுடாவிலுள்ள மசூதியில் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. உள்ளூர் வழக்கப்படி திருமணத்திற்கு முன்னதாக பெண் வீட்டிலிருந்து மணமகனுக்கு சீதனம் கொடுக்க வேண்டும். அதன்படி கடந்த சனிக்கிழமை சகாரியாவின் வீட்டுக்கு மணமகள் வீட்டிலிருந்து பல சீதனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் கட்டில் உடைந்திருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோபமடைந்த சகாரியா, பழைய கட்டிலை சீதனமாக அனுப்பியதாக குற்றம்சாட்டினார். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை மசூதியில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்துக்கு மாப்பிள்ளை சகாரியா அங்கு செல்லவில்லை. அதனை தொடர்ந்து மணமகளின் தந்தை, சகாரியாவின் வீட்டுக்கு நேரில் சென்று கேட்டபோது பழைய கட்டிலை கொடுத்து அனுப்பியதாக வாக்குவாதம் செய்தார்.
மேலும் திருமணத்திற்கு வர முடியாது எனவும் மறுத்துள்ளார் சகாரியா. இதுகுறித்து மணமகளின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி சகாரியாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய பின், தான் திருமணம் செய்துகொள்வதாக அவர் கூறினார். இருப்பினும் தங்கள் பெண்ணுக்கு இப்படிப்பட்ட மணமகன் தேவையில்லை என சொல்லி, மணமகள் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.