திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை கிளை சுற்றுப்புற கிராம பகுதியில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் வழித்தடம் 4 எண் கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடியே வண்டியை இயக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில்,  பேருந்தில் ஓட்டுநர் செல்போனில் பேசியபடியே ஒரு கையால் வண்டியை இயக்கிக் கொண்டிருந்தார். இதனை அருகில் இருந்த பயணி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

தற்போது வெளியான வீடியோ குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.