அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்கள், தற்போது புதிய விதமான குழப்பத்தை எதிர்கொள்கிறார்கள். டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் அமலுக்கு வந்த புதிய குடிவரவு கொள்கையின் அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்திய Facebook, X , LinkedIn, TikTok போன்ற சமூக ஊடக கணக்குகளை ஒவ்வொரு விசா விண்ணப்பதாரரும் கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என அமெரிக்க நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால், அமெரிக்கா செல்லத் தயாராக இருக்கும் மாணவர்களில் பலர் தங்களது பழைய பதிவுகளைத் திரும்பப் பார்த்து, தேவையில்லாத அல்லது அரசியல் சார்ந்த பதிவுகளை நீக்கி வருகின்றனர். பல மாணவர்கள், தனிப்பட்ட கருத்துக்கள், நகைச்சுவை பதிவுகள், ஆர்ப்பாட்டப் படங்கள் போன்றவை விசா விண்ணப்பத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற பயத்தில், கணக்குகளை முழுமையாக முடக்கியுள்ளனர்.

“நான் லிங்க்ட்இனில் அரசியல் கருத்துகளை பகிர்ந்தேன். எனவே நான் எந்த ஆபத்தையும் சந்திக்க விரும்பவில்லை. அதனால்தான் கணக்கை அழித்துவிட்டேன்,” என்று ஒரு மாணவர் தெரிவித்தார். மேலும் கடந்த அக்டோபர் 2023 இஸ்ரேல்-காசா மோதலுக்குப் பிறகு அமெரிக்க வளாகங்களில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் மற்றும் அதன் எதிர்வினைகள் இந்தக் கவலையை மேலும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், கல்வி ஆலோசகர்கள் மாணவர்களுக்கு அரசியல் கருத்துக்கள், சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் பகிர்வுகளை தவிர்க்க அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், அனைத்தையும் திடீரென அழித்துவிடுவது கூட சந்தேகத்திற்கிடமாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

“திடீரென கணக்குகள் காணாமல் போனாலோ, பதிவுகள் நீக்கப்பட்டாலோ விசாரணை தீவிரமாகலாம்,” என Gradding.com நிறுவனர் மம்தா ஷெகாவத் கூறியுள்ளார். எனவே, மென்மையான, தெளிவான மற்றும் நிலையான ஆன்லைன் இருப்பை பராமரிப்பதே இந்த நிலையில் மாணவர்களுக்கு பாதுகாப்பான தேர்வாக இருக்கலாம்.