
ஆந்திர பிரதேசம் மாநிலம் தெனாலியில் வசித்து வரும் 4 பேரை சயனைட் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்து கொலை செய்த சீரியல் கில்லர் பெண்கள் மூவர் கைது.
முனகப்பா ரஜினி, மதியாலா வெங்கடேஸ்வரி, குர்லா ராமனம்மா ஆகிய நடுத்தர வயது பெண்மணிகள் தெனாலி பகுதியில் வசித்து வரும் மக்களை குறிவைத்து அவர்களிடம் சினேகமாக பேசி சையனைட் கலந்த குளிர்பானங்களை குடிக்க வைத்து கொலை செய்தனர். குளிர்பானங்களை குடித்தவர்கள் சிறிது நேரத்திலே உயிர் இழந்ததும் அவர்களிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
ஜூன் மாதம் முதல் இதுவரை இவர்களின் சதியில் சிக்கி 4 பெண்கள் பலியாகியுள்ளனர். இவர்களிடமிருந்து உயிர் தப்பியவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த ஆந்திரா காவல்துறையினர் தற்போது இவர்கள் மூவரை கைது செய்தனர். மேலும் சயனைடும் திருடப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சயனைட் சப்ளை செய்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் மதியாலா வெங்கடேஸ்வரி(32) 4 வருடங்களுக்கு முன்னர் கம்போடியா சென்று அங்கிருந்து பல சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர் என்று தெரிய வந்தது. முன்னதாக கேரளாவில் ஜாலி ஜோசப் என்ற பெண்மணி 14 வருடத்தில் தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் உட்பட ஆறு பேரை சயனைடு மூலம் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.