
ராஜஸ்தானின் பரத்பூரில் வெளிவந்த ரூ.400 கோடி மதிப்பிலான பெரும் சைபர் மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய கைது நடைபெற்றுள்ளது. இந்த மோசடிக்குழுவில் தொடர்புடைய தேவேந்திரபால் சிங் (37) என்ற எம்பிஏ பட்டதாரி, ஆண்டுக்கு ரூ.28 லட்சம் சம்பளமுள்ள வேலையை விட்டுவிட்டு குற்றசெயல்களில் ஈடுபட்டதால், சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தனது ஐஐடி படித்த நண்பரான சஷிகாந்துடன் சேர்ந்து, போலி நிறுவனங்கள் மூலம் மோசடி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலியான நிறுவனங்களின் பின்னணியில் ‘அபுடான்ஸ் பேமென்ட் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் ‘ எனும் நிறுவனம் இருந்ததாக கூறப்படுகிறது.
இது பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது. இந்த நிறுவனம் வணிகர்களுக்கும் கட்டண நுழைவாயிலுக்கும் இடையில் மேடியாக இருந்து பரிவர்த்தனை ஒன்றுக்கு 0.20% கமிஷன் வசூலித்தது. இந்த நான்கு மாதங்களில் மட்டும், ரூ.400 கோடிக்கு மேல் பரிவர்த்தனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதில் சஷிகாந்த், தேவேந்திரபால் மற்றும் ரோஹித் துபே ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
இந்த மோசடிக்குழு ஏழை மக்களை இயக்குநர்களாக உருவாக்கி, அவர்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி பல போலி நிறுவனங்களை பதிவு செய்தது. சைபர் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டதன் பின்னர், இந்த மோசடியின் ஊடுருவல் அம்பலமாகியுள்ளது. இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதான திட்டதாரர்களான சஷிகாந்த் மற்றும் ரோஹித் துபே தலைமறைவில் உள்ளனர்.
ஒரே நிறுவனத்தின் மீது புகார் வந்தவுடனே புதிய நிறுவனத்தை உருவாக்கி மோசடிகளை தொடர்ந்துள்ளனர். தற்போது வரை 4000க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 10,000 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.