
ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக வந்து இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தது.
கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிக்கும் முன்பாக கர்நாடக அரசு அறிக்கை அளிக்க அட்டர்னி ஜெனரலுக்கு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. வெற்றி கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், விழா ஏற்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.