பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை அருகே கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 19 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பியபோது, மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளம், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் லாலான் சிங், “ரயில் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதே இயல்பு. பொதுமக்கள் பாதையில் பொருட்களை வைப்பதால் இவ்வாறு விபத்துகள் ஏற்படுகின்றன,” என்றார்.

மேலும், “விபத்துகள் திட்டமிட்டு நடக்கின்றன. ரயில்வே அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளது,” என்று கூறினார். இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் தினந்தோறும் ரயில் விபத்துகள் நடைபெறுகின்றன. இதனால் மக்கள் உயிரிழந்து, காயம் அடைகின்றனர். அமைச்சர்கள், இது சிறிய விபத்துதான் என அக்கறையின்றி பேசுகின்றனர்,” என தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு எதிராக எக்ஸில் (முன்னாள் ட்விட்டர்) கருத்து வெளியிட்டுள்ளார். “பாலாசோர் ரயில் விபத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த விபத்தும் நடைபெற்றுள்ளது. பலர் உயிரிழக்கின்றனர். ஆனால் எவ்விதமான பாடம் கற்றுக்கொள்வதில்லை,” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது மட்டுமின்றி, ராகுல் காந்தி,”மேல்மட்டத்தில் பொறுப்புடமை தொடங்கப்பட வேண்டும். இந்த அரசு விழித்துக்கொள்வதற்கு இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?” என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.