தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அஸ்வினி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அஸ்வினி நிறைமாத கர்ப்பிணியாய் இருந்துள்ளதால் அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் இல்லாததால் அவரை அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவரை பரிசோதித்து விட்டு பிரசவத்திற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது என தெரிவித்துள்ளனர். அதன்பின் அவரிடம் மருத்துவர் 30 நிமிடத்திற்கு நடை பயிற்சி செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது நடை பயிற்சிகள் ஈடுபட்டிருந்த அஸ்வினிக்கு திடீரென தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் உள்ளவர்கள் மருத்துவரை அழைத்தனர். மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அங்கு வந்து அவரை பிரசவ அறைக்குள் அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை வழங்கினார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மருத்துவரின் அலட்சியத்தால் இவ்வாறு நடந்ததால் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர் மற்றும் 4 செவிலியர்களையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.